திருவண்ணாமலை மாவட்டம்
ஜவ்வாதுமலை கிராமத்தில்
பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்:
செங்கம் தொல்லியல் ஆர்வலர் கண்டுபிடிப்பு
இரா.தினேஷ்குமார்
ஜவ்வாதுமலை மேல்பட்டு கிராமத்தில் உள்ள பெருங்கற்கால
நினைவுச் சின்னம்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, செங்கம் மற்றும் ஜவ்வாதுமலையில் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சுவடுகள் உள்ளன. முதுமக்கள் தாழிகள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், போர்க் கருவிகள், குள்ள மனிதர்களின் வாழ்விடம் போன்றவற்றை அதிகமாக காணலாம். இதன் மூலம் இந்த பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித சமுதாயம் வாழ்ந்தது உறுதியாகிறது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜவ்வாதுமலையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வரும் செங்கம் தொல்லியல் ஆர்வலரும், செங்கண்மா வரலாற்றுப் பேரவைத் தலைவருமான பா.பிரேம் ஆனந்த், ‘பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்’ இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, “ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமத்தில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேரில் சென்று ஆய்வு செய்தோம். வால்பாறை என்ற இடம் அருகே பாண்டவர் குட்டை என்ற இடத்தில் 7, சின்ன பாண்டவர் குட்டை என்ற இடத்தில் 1, காட்டுப் பகுதியில் 7 என மொத்தம் 15 பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. பாறை மீது கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சுமார் 3 அடி உயரத்துக்கு செவ்வக வடிவில் அமைத்து, அதன் மீது பலகை கல் கொண்டு மூடப்பட்டு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு வாயிலும் உள்ளது. 6 அடி அகலம், 15 அடி நீளம் உள்ள நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அமைத்துள்ளனர். இதனை கல்திட்டைகள் என்றும் அழைக்கின்றனர். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வழக்கத்தில், இந்த நடைமுறை இருந்துள்ளது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை, அதன்பிறகு வந்த குள்ள மனிதர்கள் தங்களின் வாழ்விடமாக பயன்படுத்தி வந்த தாகவும், அவர்களைத் தொடர்ந்து வனவாசம் சென்ற பாண்டவர்கள் அங்கு தங்கியதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் ஒருசிலர், மாண்டவர் குட்டை என்ற சொல்தான் பிற்காலத்தில் பெயர் மருவி பாண்டவர் குட்டையானது என்றும் கூறுகின்றனர். மாண்டவர் என்பது இறந்தவர்களை குறிக்கும் சொல் லாகும். நினைவுச் சின்னங்கள் இருக்கும் பகுதியை பாண்டவர் குட்டை என்றே ஜவ்வாதுமலையில் வாழும் கிராம மக்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை மிகுந்த பாதுகாப்பாக அமைத்துள்ளனர். கடுமையான வெயில் மற்றும் குளிர் காலத்தை தாங்கும் திறன் கொண்டது. விலங்குகளால் எளிதில் சேதப்படுத்த முடியாது. மழை நீர் உள்ளே வராது. அத்தகைய சுவடுகளில், புதையல் இருப்பதாக கருதி கிராம மக்கள் உட்பட பலர் சிதைத்து வருகின்றனர். புதையல் கிடைக்காமல் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பராமரிப்பு இல்லாமல் அழிவின் விளிம்பில் இருக்கும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். கற்கால மனிதர்களால் அமைக்கப்பட்ட சுவடுகளை அனைத்து மக்களும் பார்க்கும் வகையில் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக